Wednesday, May 18, 2011

ப்ரீஸ்ட் (ஆங்கிலம்) கல்லறை உலகம் - தமிழ் டப்பிங் படம் 13-05-2011

 

நீங்கள் காமிக்ஸ் புத்தகங்களை படிப்பவரா? வித்தியாசமான கதைக்களன் உங்களை கவருமா? பேன்டசி நிறைந்த கதைகள் உங்களுக்கு பிடிக்குமா? ஆம் என்றால் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். மேலே கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை என்றாலும்கூட நீங்கள் தொடர்ந்து படிக்கலாம் - நீங்கள் திரைப்படங்களை விரும்பி பார்ப்பவராக இருந்தால்.

கடந்த வாரம் வெள்ளியன்று நீங்கள் சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் பைலட் தியேட்டருக்கு வந்திருந்தால் ஒரு கோலாகலமான சூழ்நிலையை கண்டிருக்கலாம். வெகு நாள் கழித்து அன்றுதான் பைலட் தியேட்டரில் கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளுமே ஹவுஸ்புல். இதற்க்கு வேறொரு காரணமும் இருந்தது. மார்ச் மாதம் முதலே இந்த படத்திற்கு பைலட் தியேட்டரில் மிகவும் பிரம்மாண்டமான ஒரு பேனர் வைத்து இருந்தார்கள். இரண்டு மாதங்களாக படங்களே இல்லாமல் நொந்து போயிருந்த சண்டைப்பட ரசிகர்கள் இதற்காகவே காத்திருந்து படம் ரிலீஸ் ஆனதும் வந்து குவிந்து விட்டனர். இருக்காதா பின்னே, நடுவில் புதிய படங்களே இல்லாமல் மொக்கை படங்களை எல்லாம் நல்ல பிராண்ட் நேமில் ரிலீஸ் செய்து (டைட்டானிக் 3) மக்களை நோகடிதுக்கொண்டு இருந்தவேளையில் தீபாவளிக்கு வந்த ரஜினி படம்போல வந்துள்ளதே இந்த ப்ரீஸ்ட் படம்.

அதுவுமில்லாமல் இனிமேல் அடுத்த இரண்டு மாதங்களும் பைலட் தியேட்டர் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இந்த வாரம் பைரேட்ஸ் ஆப் தி கரிபியன் 4, பின்னர் அடுத்த மாதம் எக்ஸ் மென் பர்ஸ்ட் கிளாஸ் என்று தொடர்ந்து பல படங்கள் வரவிருக்கின்றன.

ப்ரீஸ்ட் - கதை பின்னணி: ஆங்கிலேயரின் வழக்கப்படி நாம் சித்திரக்கதைகளை காமிக்ஸ் என்று அழைக்கிறோம். அதனையே சந்தையாக்கும் நோக்கில் கிராபிக் நாவல் என்றும் விற்பனை செய்கிறோம். அதனைப்போலவே ஜப்பானியர்கள் தங்களுடைய சித்திரக்கதைகளை மங்கா என்று அழைக்கிறார்கள் (நன்றாக கவனிக்கவும், மாங்கா அல்ல - மங்கா தான்). தமிழிலும் சில மங்காக்கள் வந்துள்ளன (உபயம்- திரு எஸ்.விஜயன், லயன் காமிக்ஸ்). இதனைப்போலவே கொரியர்கள் தங்களுடைய சித்திரக்கதைகளை மன்ஹ்வா (Manhwa) என்று குறிப்பிடுகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு மன்ஹ்வா கதைதொடர்தான் ப்ரீஸ்ட்.

என்னை விட சரியாக ஆறு வயது மூத்தவரான யங் மின் வூ (அட, அவருடைய பிறந்த தேதியும், என்னுடைய பிறந்த தேதியும் ஒன்றுதான் - வருடங்கள் தான் வேறு வேறு) தான் இந்த கதையை எழுதியவர். பழைய காலத்து கவ் பாய் கதைகளின் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த கதையானது உண்மையில் ஒரு விடியோ கேமில் இருந்து இன்ஸ்பையர் ஆனதே. இதனை இந்த கதாசிரியரும் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

இந்த காமிக்ஸ் தொடரைப்பற்றி நண்பர் கனவுகளின் காதலன் அவர்கள் ஏற்கனவே ஒரு பதிவு எழுதி இருக்கிறார். பதினான்கு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த கதைத்தொடர் இதுவரையில் பதினாறு பாகங்கள் வந்து பெருவெற்றி பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சுமார் ஏழு ஆண்டுகளாக இந்த கதைதொடரை திரைவடிவில் கொணர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இப்போதுதான் அது ஒரு வழியாக நிறைவேறியுள்ளது.

வேறொரு உலகில் மனிதர்களுக்கும், இரத்தக் காட்டேரிகளுக்கும் நடைபெறும் யுத்தமே இந்த கதைத்தொடரின் பின்னணி. கதைக்களனை அப்படியே கவ்பாய்கள் நிறைந்த வைல்ட் வெஸ்ட் உலகுக்கு அவதானம் செய்யுங்கள். கதையின் டோன் அப்படியே இருக்கும். இந்த கதையில் வரும் ப்ரீஸ்ட்'டுகளை சட்டப்பரிபாலனம் செய்யும் ஷெரிப் போலவும் கொள்ளலாம். கதைப்படி இரத்தக்காட்டேரிகளை அழிக்க திருச்சபை இளம்வயதிலேயே பல சிறுவர்களை சிறப்பான பயிற்சி அளித்து அவர்களை வெல்லமுடியாத மாவீரர்களாக உருவாக்கி இரத்தக்காட்டேரிகளை அழிக்க அனுப்புகிறது. இந்த சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் நெற்றியில் சிலுவை குறியீடு பச்சை குத்தப்பட்டிருக்கும். இவர்கள் ப்ரீஸ்ட் என்று அழைக்கப்படுவார்கள். பெண்பாலர்கள்  ப்ரீஸ்ட்டஸ் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் அனைவரும் உலக இச்சைகளை துறந்தவர்கள். கிட்டத்தட்ட புனிதப்போரில் வந்த க்ருசேடர்ஸ் மாதிரித்தான் இவர்களும்.

கல்லறை உலகம் - திரைப்படம்: கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் டெவலப்மென்ட் ஹெல் என்று ஹாலிவுட்டில் சொல்லப்படும் இடைப்பட்ட காலத்திலேயே இந்த படம் இருந்தது. அதாவது கதை ரெடி, ஸ்க்ரிப்ட் ரெடி, புரொடியூசர் ரெடி ஆனால் படமாக்கல் மட்டும் அப்படியே இருக்கும். அப்படி இருந்த காலங்களில் பல இயக்குனர்கள், ஹீரோக்கள் மாறி பின்னர் சென்ற ஆண்டு வெளிவந்த லீஜியன் பட இயக்குனர் ஸ்காட் ஸ்டிவர்ட் அவர்களின் இயக்கத்தில் அவரின் பேவரிட் ஹீரோ பால் பெட்டானியுடன் இந்த படம் படமாக்கப்பட்டது.

படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்தது 2009ல். அப்போது வெறும் 2-Dயில் படமாக்கப்பட்ட இந்த படம் சென்ற ஆண்டே ரிலீஸ் ஆகவேண்டியது. ஆனால் அவதார் மற்றும் பல படங்களின் மகத்தான வெற்றியை கண்டு இந்த படத்தையும் 3-Dக்கு மாற்ற முடிவெடுத்தனர். அதன் விளைவு? இன்னும் ஆறுமாத தாமதம். ஒரு வழியாக இந்த வெள்ளியன்று 3-Dயில் இந்த படம் திரைக்கு வந்தது (பைலட் தியேட்டரில் 2-D தான்).

கல்லறை உலகம் - கதை பின்புலம்: கதை நடப்பது வேறொரு மாற்று உலகில். மனிதர்களுக்கும், இரத்தக்காட்டேரிகளுக்கும் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த புனிதப்போர் ஒரு வழியாக 'முடிவு' பெற்ற நிலையில் அந்த போரில் பங்கேற்ற ப்ரீஸ்ட்டுகளின் தேவை இனிமேல் திருச்சபைக்கு தேவைப்படவில்லை. எஞ்சியுள்ள மனிதர்கள் அனைவரும் ஒரு மிகப்பெரிய நகரத்தில் மிகுந்த பாதுகாப்புடன் திருச்சபையின் கண்ட்ரோலில் வாழ்கின்றனர். அந்த நகரத்திற்கு கூரை வேயப்பட்டு அனைத்து வகையிலும் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளது. மக்கள் அனைவரையும் திருச்சபை "இரத்தக்காட்டேரிகள் இறந்து விட்டார்கள்" என்ற நம்பிக்கையில் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கிறது.  முன்னாள் போராளிகள் அனைவரும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். திருச்சபைக்கு வெளியேயும் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் திருச்சபையின் கண்ட்ரோலில் இல்லாமல் தனித்து வாழ்கின்றனர். இவர்களை பாதுகாக்க சட்ட அதிகாரிகளாக அந்தந்த ஊர் ஷெரிப்கள் இருக்கின்றனர்.

ப்ரீஸ்ட் - முதல் பாகம்: படத்தின் ஆரம்பத்தில் சில காட்சிகள் மட்டுமே ஒரிஜினல் காமிக்ஸ் காட்சிகளை உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். அந்த காட்சிகள் பல ஆண்டுகளாக நடந்து வரும் போரைப்பற்றி உள்ளது. பின்னர் அனிமேஷனில் இருந்து ரியல்மோஷன் பிச்சர் ஆரம்பிக்கும்போது ஊருக்கு வெளியே தனித்து வசிக்கும் ஒரு குடும்பம் இரதக்காட்டேரிகளால் தாக்கப்படுகிறது. அந்த குடும்பத்தின் உறுப்பினர்கள் தாக்கப்பட, ஒரு இளம்பெண்ணை மட்டும் கதையின் எதிர்நாயகன் கருப்பு தொப்பி (பிளாக் ஹாட்) கடத்தி செல்கிறான். தகவல் அறிந்த அந்த ஊரின் ஷெரிப் மற்றும் அந்த பெண்ணின் (ஒருதலைக்)காதலன் உடனடியாக அந்த பெண்ணின் தந்தியின் வேண்டுகோளுக்கிணங்க நம்ம ஹீரோவை தேடி பாதுகாப்பில் இருக்கும் திருச்சபை நகருக்கு வருகிறான். தகவல் அறிந்த ப்ரீஸ்ட் தலைமை பாதிரியிடம் நகரைவிட்டு செல்ல வேண்டுகோள் விடுக்கிறான். அப்படி அனுமதித்தால், இரத்தக்காட்டேரிகள் இருப்பது உண்மையாகிவிடும் என்று பயந்த பாதிரி அனுமதி மறுக்கிறார்.

இவ்வளவு நாட்களாக தன்னை ஒரு அடிமை போல நடத்திய திருச்சபை, தன்னுடைய ஒரு கோரிக்கையையும் செவிமடுக்காததைக்கண்டு பொங்கியெழும் ஹீரோ, உடனடியாக பாதுகாவலர்களை துவம்சம் செய்துவிட்டு தன்னுடைய அண்ணன் மகளைதேடி ஷெரிப் உடன் பயணத்தை ஆரம்பிக்கிறார். ஹீரோ தப்பியதை அடுத்து, திருச்சபை நான்கு போராளிகளை அனுப்புகிறது (அதில் ஒரு சைனாக்காரர், ஒருவர் பெண் - ப்ரீஸ்ட்டஸ்). இவர்கள் தங்கள் பயணத்தை ஆரம்பிக்கும்போது கடத்தப்பட்ட அந்த பெண்ணிடம் கருப்பு தொப்பி "உன்னை கடதியதே உன்னுடைய மாமாவாகிய அந்த ப்ரீஸ்ட்'ஐ பிடிக்கத்தான்" என்று கூறுகிறார். அதில் இருந்து துடி துடிப்பான ஒரு பயணம் ஆரம்பிக்கிறது.

உண்மையில் ப்ரீஸ்ட் என்பது யார்? அவனுக்கு அடிக்கடி வரும் அந்த கனவின் பின்னணி என்ன? அவனுக்கும் கருப்பு தொப்பிக்கும் இருக்கும் உறவு என்ன? கருப்பு தொப்பி ஏன் இப்படி ப்ரீஸ்ட் மீதும், திருச்சபை மீதும் கொலைவெறி கொண்டு அலைகிறான்? அந்த பெண் யார்? இவர்களை தேடி வந்த அந்த நான்கு போராளிகளின் கதி என்ன? ஒவ்வொரு ஊரிலும் நாசம் விளைவித்து விட்டு கருப்பு தொப்பியின் கும்பல் எப்படி சூரிய ஒளி வருவதற்குள் எப்படி தப்பிக்கிறார்கள்? மற்ற இரத்தக்காட்டேரிகளை பாதிக்கும் சூரிய ஒளி கருப்பு தொப்பியை மட்டும் ஒன்றும் செய்யாதது ஏன்? இருள் நிறைந்த மரணக்குகையில் தங்கியிருக்கும் இரத்தக்காட்டேரிகளின் மகாராணியின் ரகசியம் என்ன?  உண்மையில் திருச்சபையை எதிர்ப்பது அந்த ஆண்டவனையே எதிர்ப்பது போலவா? (கொய்யால, படத்துல அப்படிதான் வசனங்கள் வருதுங்கோவ்).

இவற்றை எல்லாம் வெள்ளித்திரையில் காண்க. ப்ரீஸ்ட் திரைப்படம் மிஸ் செய்யக்கூடாத திரைப்படங்களில் ஒன்று அல்ல. அதே சமயம் மோசமான திரைப்படமும் அல்ல. கண்டிப்பாக நேரமிருப்பின் சண்டைப்படபிரியர்கள் கண்டுகளிக்க வேண்டிய படமே கல்லறை உலகம்.

படத்தின் அட்டகாசமான காட்சி: ஒரு மிகப்பெரிய குகையில் இரத்தக்காட்டேரிகளை தேடியவாறு ப்ரீஸ்ட்டும், ஷெரிப்பும் செல்ல அங்கே ப்ரீஸ்ட்டஸ் ஏற்கனவே இவர்களுக்காக காத்திருக்கிறார். இவர்கள் இருவரும் ஷெரிப்'ஐ வெளியே காத்திருக்க சொல்லிவிட்டு குகையின் உள்ளே நுழைகிறார்கள். அங்கே இராட்சத காட்டேரி ஒரு இவர்கள் மீது பாய்கிறது. இருவரும் இணைந்து அந்த மிருகத்தை கொல்லும் அந்த செட்-பீஸ் காட்சி அப்படியே "கிரவ்ச்சிங் டைகர், ஹிட்டன் டிராகன்" படங்களின் சண்டைகளுக்கு ஒரு மகத்தான ட்ரிப்பியூட்.

படத்தின் மொக்கை (ஆகிவிட்ட) ஒரு காட்சி: ஒரு நகரம். இரயில் பாதையால் மற்ற ஊர்களுடன் இணைக்கப்பட்டு இருந்தாலும் தனித்தே இருக்கிறது. அந்த ஊரை அழிக்க கருப்பு தொப்பி தன்னுடைய படையுடன் வருகிறான். அவர்கள் ஸ்டைலாக இரயிலில் வந்து இறங்குவது, ஸ்டேஷன் மாஸ்டர் மிரள்வது என்று பில்ட்-அப் காட்சிகள் அப்படியே செர்ஜியோ லியோனியின் ஒன்ஸ் அபான் எ டைம் இன் தி வெஸ்ட் படத்தின் காட்சிகளை நினைவுபடுத்தும். ப்ரீஸ்ட் படத்தில் இந்த காட்சி அட்டகாசமான மியூசிக்குடன் செம பில்ட்-அப்புடன் ஆரம்பிக்கும். ஆனால் அந்த காட்சியை அப்படியே கட் செய்து, அவர்கள் அனைவரையும் அழிந்த பிறகு இருக்கும் காட்சிக்கு இயக்குனர் நம்மை கொண்டு செல்கிறார். ஒரு வேலை, அந்த அழிவு காட்சிகளை திரையில் காண்பிக்க வேண்டாமென்று நினைத்திருக்கலாம். ஆனால் அவ்வளவு பில்ட்-அப்பிற்கு பிறகு புஸ்ஸ்ஸ் என்று இருக்கிறது அந்த ஸீன். யு மிஸ்ட் இட், டைரக்டர். 

படத்தின் ஹை-லைட்: கண்டிப்பாக அந்த கிளைமேக்ஸ் டிரெயின் சண்டைக்காட்சிதான். சென்ற வாரம் வந்த பாஸ்ட் & பியூரியஸ் 5 படத்தில் ஆரம்ப காட்சியே ஒரு டிரெயின் சேசிங்தான். அந்த அளவிற்கு இல்லையென்றாலும் இந்த படத்தில் ஓரளவுக்கு நன்றாகவே இருக்கிறது அந்த இரயில் சண்டைக்காட்சி. ஓடும் ரெயிலில் கருப்பு தொப்பியும் அவனது கும்பலும் பயணிக்க, ரெயிலின் பின்பக்கத்தில் இருந்து ஷெரிப் நுழைந்து அந்த பெண்ணை தேடிக்கொண்டு வர, நடுவில் இருந்து ப்ரீஸ்ட் தேட, முன்னே சென்று வெடிகுண்டுகளை செட் செய்கிறார் ப்ரீஸ்ட்டஸ். அப்புறம் நடக்கும் காட்சிகள் தான் கிளைமேக்ஸ்.

 

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: 2 bullets  2/6. இரண்டு தோட்டாக்கள்.

கிங்'ஸ் பன்ச்: ப்ரீஸ்ட்டுக்கு தேவை பாவ மன்னிப்பு.

13 comments:

கனவுகளின் காதலன் said...

விஸ்வா,

புதிய வலைப்பூவிற்கு வாழ்த்துக்கள். ப்ரீஸ்ட் இன்னமும் பார்க்கவில்லை. விமர்சனம் சிறப்பாக இருந்தது. தொடர்ந்து கலக்குங்கள்.

MSK / Saravana said...

வாழ்த்துக்கள் தல :)) படம் இன்னும் பார்க்கல..

VISA said...

விமர்சனமே திகிலூட்டுகிறது.

உலக சினிமா ரசிகன் said...

வாழ்த்துக்கள் நண்பரே..முகப்பு நன்றாக இருந்தது.தொடக்கமே அற்புதம்.

Unknown said...

இந்தப் படம், கொஞ்சம் மொக்கை போடுதுன்னு நம்ம லக்கி எழுதிருக்காரு. இங்க ஓடுது. ஆனா பாக்கலாமான்னு தெரியலை. உங்க சைட், என்னோட பழைய கருந்தேள் சைட்டோட லே அவுட் மாதிரியே இருக்கு :-) . . இன்னமும் என்னோட ஆங்கில சைட் இதே லேஅவுட் தான் :-)

Lucky Limat - லக்கி லிமட் said...

மீ த பாஸ்ட் பாலோயர்

Lucky Limat - லக்கி லிமட் said...

விஸ்வா இரண்டு தோட்டாக்கள் அதிகம் . டம்மி துப்பாக்கி என கொடுத்திருக்கலாம்

King Viswa said...

//கனவுகளின் காதலன் said...
விஸ்வா,

புதிய வலைப்பூவிற்கு வாழ்த்துக்கள். ப்ரீஸ்ட் இன்னமும் பார்க்கவில்லை. விமர்சனம் சிறப்பாக இருந்தது. தொடர்ந்து கலக்குங்கள்.//

நன்றி காதலரே. படம் ஒக்கே தான், அப்படி ஒன்றும் மஸ்ட் வாட்ச் இல்லை. டைம் பாஸ். அவ்வளவுதான்.

//MSK / Saravana said...
வாழ்த்துக்கள் தல :)) படம் இன்னும் பார்க்கல..//

வாங்க தல, உங்களுக்கு படம் பிடிக்குமுன்னு நினைக்கிறேன். டைம் இருந்தா பாருங்க.

//VISA said...
விமர்சனமே திகிலூட்டுகிறது.//

இதில் விசா டச் எதுவும் இல்லையே? நான் இந்த பிளாக் ஆரம்பித்ததே உங்களைப்போல எழுத வேண்டும் என்ற ஆவலில்தான். உங்களுடைய பைய்யா பட விமர்சனம் மாதிரி ஒன்று எழுதினாலே போதும், நானும் விஸ்வா பக்கங்கள் என்று ஆரம்பித்து விடுவேன்.

//உலக சினிமா ரசிகன் said...
வாழ்த்துக்கள் நண்பரே..முகப்பு நன்றாக இருந்தது.தொடக்கமே அற்புதம்//

நன்றி ஐயா. உண்மையில் இந்த தளம் ஆரம்பித்ததின் நோக்கமே பழைய தமிழ் படங்களை பற்றி எழுதுவது தான். ஆனால் பல ஆராய்சிகள் அப்படியே இருப்பதால், வேறு வழியின்றி இந்த மாதிரி புதிய படங்களை விமர்சிக்க ஆரம்பித்துள்ளேன். விரைவில் பழைய தமிழ் படங்களை இங்கே காணலாம். அப்போது உங்களுக்கு இந்த தளம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

//The S c o r p said...
இந்தப் படம், கொஞ்சம் மொக்கை போடுதுன்னு நம்ம லக்கி எழுதிருக்காரு. இங்க ஓடுது. ஆனா பாக்கலாமான்னு தெரியலை. உங்க சைட், என்னோட பழைய கருந்தேள் சைட்டோட லே அவுட் மாதிரியே இருக்கு :-) . . இன்னமும் என்னோட ஆங்கில சைட் இதே லேஅவுட் தான் :-)//

ஸ்கார்ப்'ஐ மறக்க முடியுமா? உங்கள் அறிமுகமே அப்படிதானே கிடைத்தது? உங்களின் ஆங்கில விமர்சனங்களில் பதிவிட்ட பின்புதானே அறிமுகம் தொடங்கியது. இந்த டிசைன் நம்ம பயங்கரவாதி அவர்களின் பிளான்.

இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என்றே தோன்றுகிறது. நம்ம இருவரின் டேஸ்ட் ஒரே மாதிரி இருப்பதால் சொல்கிறேன்.

//Lucky Limat லக்கி லிமட் said...
மீ த பாஸ்ட் பாலோயர்// + //விஸ்வா இரண்டு தோட்டாக்கள் அதிகம் . டம்மி துப்பாக்கி என கொடுத்திருக்கலாம்//

நன்றி லிமட். நம்மோட பன்ச் டையலாக்கை இப்போ சேர்த்திருக்கேன். பாருங்க.

JZ said...

நல்ல விமர்சனம்..
சகிக்கக் கூடிய படம்தான்.. என்றாலும் இன்னுமொரு பாகம் வந்தால் கண்டிப்பாக ரிஸ்க் எடுக்க நான் தயாரில்லை!!

Speed Master said...

நன்பரே background black மாற்றவும் கண் கூசுகிறது

கருந்தேள் கண்ணாயிரம் said...

அப்புடீன்னா ஒகே .. இதை, கொஞ்சக நாளில் பார்த்து விடுகிறேன் ( இங்கே பெங்களூரில், ப்ளூ ரே டிவிடிக்கள் சீக்கிரம் வந்துவிடும்) . .

கருந்தேள் கண்ணாயிரம் said...

அதேபோல, அந்த ரெண்டு தோட்டா ரேட்டிங் சிஸ்டம் தூள். ப்ளஸ், 'ஸமூகம்'ன்ற வார்த்தை பிரயோகம் நல்லா இருந்தது. உடனே எம்.கே.டியின் நாஸ்டால்ஜிய நினைவுகள் வந்து தாக்கியது :-)

Anonymous said...

sema bore padam. idhukku vimarsaname athigam.

Post a Comment